கனியாமூர் மாணவி ஸ்ரீமதி வழக்கில் பள்ளி நிர்வாகத்தினர் 5 பேரின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நீட்டித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருவதால், 5 பேரையும் ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை செய்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், 5 பேரையும் ஜாமீனில் விடுவிக்கக் கோரி விழுப்புரம் நீதிமன்றத்தில் பள்ளி நிர்வாகத்தினர் மனு தாக்கல் செய்திருந்தனர். 5 பேரின் ஜாமீன் மனுவை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி சாந்தி, சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்யும் கிரைம் நம்பரை கொண்டும், ஜிப்மர் மருத்துவ குழுவினர் இறந்த மாணவியின் 2 உடற்கூறு ஆய்வு அறிக்கையை கொண்டும் ஆய்வு செய்து தாக்கல் செய்யும் அறிக்கையை கொண்டு தான் முடிவு செய்யப்படும் என்றுகூறி ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரணையை 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர் 5 பேருக்கும் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதால், விழுப்புரம் மாவட்ட தலைமை நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா 5 பேரையும் கூடுதலாக 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க இன்று உத்தரவு பிறப்பித்தார். இதனால், பள்ளி நிர்வாகத்தினர் 5 பேரின் காவல் ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.