காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தராமல் இழுத்தடிக்கும் கர்நாடக அரசின் செயலை எதிர்த்து, அமைச்சர் துரைமுருகன் ஆலோசனைப்படி தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையே, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரை மற்றும் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை.
இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.க்களும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை இன்று சந்தித்தனர். இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், ”தண்ணீர் இருந்தும் கொடுப்பதற்கு கர்நாடக அரசு மறுக்கிறது. தண்ணீர் கொடுக்கும் எண்ணம் கர்நாடக அரசுக்கு இல்லை.
காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்குரிய நீரை திறந்துவிடும்படி மத்திய அரசு, கர்நாடகாவுக்கு வலியுறுத்த வேண்டும் என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினோம். கர்நாடகாவிலிருந்து வருபவர்களிடமும் மனுவை வாங்கி வைத்துக்கொள்கிறீர்கள், எங்களிடமிருந்து கொடுக்கப்படும் மனுவையும் வாங்கி வைத்துக்கொள்கிறீர்கள். ஆனால், இதில் உறுதியான முடிவை இன்னும் எடுக்கவில்லை. எனவே, இதற்கான தீர்வை வழங்க வேண்டும் என கோரியிருக்கிறோம். எனவே, இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம்“ என்றார்.