கருணாநிதியின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காலமானார். அவரது உடல் சென்னை மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், திமுக தலைவர் முக.ஸ்டாலினின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அந்த இடத்தில் 2.21 ஏக்கரில் கருணாநிதி நினைவிடம் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நினைவிடத்தில் இருந்து 290 மீ தூரத்திற்குக் கடற்கரை, 360 மீ தூரத்திற்குக் கடலிலும் என 650 மீட்டர் தொலைவிற்குப் பாலம் அமைக்கப்பட்டு 134 அடி உயரத்தில் பிரம்மாண்ட பேனா சின்னத்தை நிறுவ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு திட்டமிட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள, சிலைகளை விட இந்த நினைவுச் சின்னம் உயரமாக அமையவிருப்பதால், கருணாநிதியின் புகழ் நிலைத்து நிற்கும் எனச் சொல்லப்படுகிறது. உலகத்தரத்தில் உருவாக்கப்படும் இந்த நினைவுச் சின்னமானது, இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்தாலும் கருணாநிதியின் புகழை மங்கச் செய்யாதவாறு வடிவமைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. மெரினா கடற்கரையில் ரூ.39 கோடி செலவில் அரசு சார்பில் நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இது ஒருபுறம் இருக்கக் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது முதல் அந்த நினைவிடம் நாள்தோறும் கட்சியினர் சார்பில் மலர்களால் தினசரி அலங்காரம் செய்யப்படுகிறது. இந்நிலையில், 4ஆம் ஆண்டு நினைவை அனுசரிக்கும் விதமாகக் கருணாநிதி நினைவிடத்தில், கடல் போன்ற மாதிரியை வடிவமைத்து அலங்கரித்துள்ளனர்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணியும் இன்று நடைபெற்றது. இந்த பேரணியில் அமைச்சர்கள் துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோரும், பாராளுமன்ற உறுப்பினர்களாக கனிமொழி, தயாநிதி மாறன் மற்றும் திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திமுக தொண்டர்கள் பலர் கருப்பு சட்டை அணிந்துக் கொண்டு அமைதி பேரணியில் பங்கேற்றனர். ஓமந்தூரார் மருத்துவமனையில் தொடங்கிய அமைதி பேரணி கருணாநிதி நினைவிடத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து, மெரினாவில் உள்ள கருணாநிதியின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.