பெண்களுக்காக மத்திய-மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஒரு முக்கியமான நிதியுதவி வழங்கும் திட்டம் தான் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் (PMMVY). இந்த திட்டத்தின் மூலம் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு ரூ.5,000 நிதியுதவியாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு யாரெல்லாம் தகுதியானவர்கள் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் (PMMVY):
இந்த திட்டம் பிரத்யேகமாக கருவுற்றிருக்கும் மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுவதும் இந்த திட்டம் அங்கன்வாடிகள் மற்றும் அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. கருவுற்றிருக்கும் பெண்களுக்கு நிதியுதவியாகவும், குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடுகளைத் தவிர்க்க உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது. விளிம்பு நிலையில் இருக்கும் பெண்கள், பொருளாதாரத்தின் பின் தங்கிய பெண்கள் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். மேலும், முதல் குழந்தைக்கு மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் நிதியுதவி பெற முடியும்.
இத்திட்டத்தின் கீழ் ரூ.5,000 பணம் மூன்று தவணைகளில் வழங்கப்படும். முதல் தவணையாகப் பெண்கள் கருவுற்ற போது ரூ.1000 வழங்கப்படும். 2ஆம் தவணை ரூ.2,000 கர்ப்பகால சிகிச்சையின் போது வழங்கப்படும். மூன்றாம் தவணை ரூ.2,000 குழந்தை பிறந்த பிறகு வழங்கப்படும். இந்த நிதி உதவி நேரடியாக உங்களில் வங்கிக் கணக்கிற்குச் செலுத்தப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி..?
அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களில் கர்ப்பகால சிகிச்சையின் போது இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து நிதியுதவி பெறலாம். மேலும், https://pmmvy.nic.in/Account/Login என்ற இணையதளம் மூலமாகவும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் மூலம் சுமார் 3 கோடிக்கும் அதிகமான கர்ப்பிணிகள் பயனடைந்துள்ளனர். மத்திய அரசினால் சுமார் 13.766 ரூபாய் கோடி பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்திற்குச் செலவு செய்யப்பட்டுள்ளது.