நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் லியோ. இவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது. விக்ரம் படத்தின் மிக பெரிய வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. திரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், மிஷ்கின் உள்ளிட்டோரின் நடிப்பில் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது.
ஏற்கனவே இந்த படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கி ரத்து செய்யப்பட்டது. மேலும் படம் வெளியாக சில தினங்களே உள்ளதால், தியேட்டர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தேனி மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் திரையிட கூடுதலாக ஒரு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தியேட்டர்களில் காலை 9 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.30 மணிக்குள் இப்படத்தினை திரையிடலாம். வருகிற 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை வழக்கமான 4 காட்சிகளுடன் கூடுதலாக ஒரு காட்சி (அதிகபட்சமாக 5 காட்சிகள் மட்டுமே) குறித்த நேரத்திற்குள் மட்டுமே தியேட்டர்கள் செயல்பட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நேரம் தவிர மற்ற நேரங்களில் தியேட்டர்களில் இப்படம் திரையிடக்கூடாது. தியேட்டர்களை சுகாதாரமாக பராமரிக்க போதுமான கால இடைவெளியுடன் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிறப்பு காட்சி நடத்தப்பட வேண்டும்.
தேனி மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் புதிய திரைப்படங்கள் வெளியிடப்படும்போது தமிழ்நாடு திரையரங்கு (ஒழுங்குமுறை) விதிகள் -1957 மற்றும் தமிழ்நாடு கேளிக்கை வரி சட்டம் 1939-ல் உள்ள விதிகளை விட கூடுதலாக வசூல் செய்தால் புகார் செய்யலாம். இதுதொடர்பாக சிறப்பு கண்காணிப்பு குழு தலைவர்களை (பெரியகுளம் கோட்டம்) -9445000451, (உத்தமபாளையம் கோட்டம்) 9445000452 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் செய்யலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.