‘பார்ன் வித் சில்வர் ஸ்பூன்’, பிறக்கும்போது வாயில் வெள்ளிக் கரண்டியுடன் பிறந்த குழந்தை என்ற வாசகம் ஆங்கிலத்தில் உண்டு. இந்த வாசகத்தை மெய்பிக்கும் விதமாக பிரிட்டனில் பிறந்து 2ஆம் நாளே ஒரு குழந்தை பல கோடிகளுக்கு அதிபதியாகியுள்ளது. இந்த குழந்தை குறித்த செய்திகளும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மிகப்பெரிய கோடீஸ்வரரான பாரி ட்ரூவிட் பார்லோவின் மகள் சாஃப்ரான் டிரைவ்ட் பார்லோ. 23 வயதான சாஃப்ரானுக்கும் கார்னர் என்பவருக்கும் திருமணம் நடந்து தற்போது ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
தனக்கு பேத்தி பிறந்த மகிழ்ச்சியில் கோடீஸ்வரர் பாரி, ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனது செல்ல பேத்திக்கு தனது அறக்கட்டளை நிதியில் இருந்து ரூ.52 கோடியை பரிசாக அளித்துள்ளார். அத்துடன் ரூ.10.44 கோடி மதிப்பிலான சொகுசு பங்களாவையும் தாத்தா பரிசளித்துள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள பாரி, தனது பேத்திக்கு மாரினா என பெயர் வைத்துள்ளதாக தெரிவித்தார். தனது பேத்திக்கான சொகுசு பங்களாவின் இன்டிரியர் உள்ளிட்டவற்றை மாற்றி அமைக்கவும் டிசைனர்களை அவர் களமிறக்கியுள்ளார்.
கோடீஸ்வரர் பாரி ஆடம்பர நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர். ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக சராசரியாக 4 மில்லியன் பவுண்ட் என கோடிக்கணக்கில் செலவிடுவார். சமீபத்தில் இவருக்கு ரோமியோ என்ற ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு அவர் 25 கோடி ரூபாய் மதிப்பில் சொகுசு கப்பலை பரிசாக வழங்கினார். நாள்தோறும் கடுமையாக உழைத்து பணம் சேமித்து பணக்காரர்களாக மாற வேண்டும் லட்சக்கணக்கானோர் கனவும் காணும் வேளையில், பாரி வீட்டில் பிறக்கும் பச்சிளம் வாரிசுகள் பிறக்கும் போதே கோடிக்கணக்கான மதிப்பிலான பணம் சொத்துக்களை பரிசாக பெறுகின்றன.