இந்தியாவில் ஏராளமான வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் மற்றும் கோவில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கோவில்களும் ஒரு தனித்துவமான வரலாற்றையும் புராண கதைகளையும் கொண்டிருக்கும். பல புராதன கோவில்களும் கோட்டைகளும் அடங்கிய இந்திய நாட்டில் சில மர்மம் நிறைந்த பழங்கால இடங்களும் உண்டு. அதில் ஒன்று தான் இந்த கக்கன்மாத் சிவன் கோவில்.
மத்தியப்பிரதேசத்தின் குவாலியர் நகரத்தில் இருந்து கிட்டத்தட்ட 65 கிமீ தொலைவில் உள்ள சிஹோனியாவில் அமைந்துள்ளது இந்த கக்கன்மாத் கோவில். சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கோவில் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இது பேய்களால் கட்டப்பட்ட கோவில் என்று பலர் கூறுகின்றனர். அதுவும் ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. தரையில் இருந்து சுமார் 115 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோவில் புனிதம் என்பதை விட, மர்மமான கோவில் என்று தான் உள்ளூர்வாசிகளால் அறியப்படுகிறது.
இந்த கோவில் குறித்து இன்னும் குழப்பமான விஷயங்களும் உள்ளன. பொதுவாக கோவில் என்றால் கற்களை ஒன்றோடு ஒன்று அடுக்கி சாந்து பூசி கட்டப்பட்டு இருக்கும். ஆனால் இந்த கோவில் சுண்ணாம்பு, சிமெண்ட் மற்றும் கலவை எதுவும் இல்லாமல், வெறும் கற்களை கொண்டே கட்டப்பட்டுள்ளது. இதுவும் பலருக்கு மர்மமாக தோன்றுகிறது. புராணகதைகளின் படி, இக்கோவில் கட்டுவதற்கு சிவபெருமான் பேய்களுக்கு ஆணையிட்டாராம். அதுவும் அடுத்த நாள் காலை விடிவதற்குள் தனக்கு ஒரு கோயில் கட்டவேண்டும் என்று கூறினாராம். கோவில் கட்டுமானம் முடிவதற்குள் விடிந்ததால் அப்படியே விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
இப்படி சில கதைகள் உலாவ, இன்னும் சிலர் கக்கன்மாத் கோவில் 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும், அந்த சமயத்தில் கச்வாஹா வம்சத்தின் கிர்த்தி மன்னன் தனது மனைவிக்காக கட்டப்பட்டதாகவும் நம்புகிறார்கள். அவர் ஒரு சிவபெருமானின் பக்தை என்றும், சுற்றி ஒரு சிவன் கோயில் கூட இல்லாததால், அவர் அதைக் கட்டினார் என்றும் பலர் நம்புகிறார்கள். ஆனால் அதிகப்படியான மக்களை ஈர்ப்பது முதல் கதை தான். இப்படி இந்த கோவிலுக்கு பின்னால் பல கதைகள் இருந்தாலும் கக்கன்மாத் கோவிலின் வரலாற்று மற்றும் கலாச்சாரம் உலகம் முழுவதிலுமிருந்து வரும் யாத்ரீகர்களையும் பயணிகளையும் கவர்ந்திழுக்கிறது. அவர்கள் இந்த இடத்திற்கு வருகை தந்து அதன் அழகை ரசிக்கின்றனர்.