விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் 22 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். இவரின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், அவரின் தாயார் விவசாய கூலித்தொழிலாளியாக இருந்து வருகிறார். இளம்பெண்ணுக்கு 2 தங்கைகள் உள்ளனர். இந்நிலையில், இளம்பெண்ணுக்கும் – கல்லூரணி பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது 22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இதையடுத்து, இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், ஜெயக்குமார் இளம்பெண்ணிடம் நெருங்கி பழகியுள்ளார். இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் இளம்பெண் கர்ப்பமாகவே, ஜெயக்குமாரின் வற்புறுத்தலின் பேரில் கர்ப்பம் கலைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து, இளம்பெண் தன்னை திருமணம் செய்ய தொடர்ந்து வற்புறுத்திவர, ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ந்துபோன இளம்பெண் காதலனின் பெற்றோர் தாவீது (வயது 50), ஜெபமலர் (வயது 45), சகோதரி ஜான்சிமேரி (வயது 26) ஆகியோரிடம் பேசியிருக்கிறார்.
அவர்கள் ஜெய்குமாருக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடப்பதாகவும், உன்னை திருமணம் செய்ய சம்மதிக்கமாட்டோம் எனவும் கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் இளம்பெண், எம். ரெட்டியபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்ற காவல்துறையினர் ஜெயக்குமார், அவரின் பெற்றோர் மற்றும் சகோதரி ஆகிய 4 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து, ஜெயக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.