மத்திய அரசின் ஆலோசனையை ஏற்று, சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், விலையை 6 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளன.
சர்வதேச அளவில், சமையல் எண்ணெய் தயாரிப்பிற்கான மூலப்பொருட்களின் உற்பத்தி அதிகரித்துள்ளதை அடுத்து, அவற்றின் விலையை குறைந்துள்ளன. இதையடுத்து, சமையல் எண்ணெய் சில்லரை விற்பனை விலையை குறைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் ஆலோசனையை ஏற்று, சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், விலையை 6% வரை குறைக்க முடிவு செய்துள்ளன. சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கமான, எஸ்.இ.ஏ., அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த இரண்டு மாதங்களில், எண்ணெய் தயாரிப்பிற்கான மூலப்பொருட்களின் விலை கடுமையாக குறைந்துள்ளது. நிலக்கடலை, சோயா பீன்ஸ், கடுகு உற்பத்தி அமோகமாக இருந்தும், சர்வதேச அளவிற்கு உள்ளூர் சந்தைகளில் சமையல் எண்ணெய் விலை குறையவில்லை. தற்போதைய உள்ளூர் சந்தை விலை அதிகளவில் இருப்பதாக தெரிகிறது. மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம், சமையல் எண்ணெய்களின் சில்லரை விற்பனை விலையைக் குறைத்து, பலனை நுகர்வோர்களுக்கு அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, முன்னணி நிறுவனங்கள் பல சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை குறைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.