ஜி 20 உச்சி மாநாட்டின்போது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அளித்த விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றதை, ‘சனாதன சமாதானம்’ என, சமூக வலைதளங்களில் தமிழக காங்கிரசார் விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதனையொட்டி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சார்பில் வெளிநாட்டு தலைவர்கள், பிரதமர் மோடி, முதல்வர்கள் மம்தா, ஸ்டாலின், ஹேமந்த் சோரான்உள்ளிட்ட தலைவர்களுக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், அமெரிக்க அதிபர் ஜோ பைடைனை சந்தித்து கைக்குலுக்கினார். அதேசமயம் காங்கிரஸ் முதல்வர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்காமல் புறக்கணித்திருந்தார்.
இந்தநிலையில், முதல்வர் ஸ்டாலின், விருந்தில் பங்கேற்றதை தமிழக காங்கிரசார் சமூக வலைதளங்களில், ‘சனாதான சமாதானம்’ என்ற தலைப்பில் பதிவிட்டு விமர்சித்துள்ளனர். மேலும், சர்வதேச தலைவர்களுக்கு ஜனாதிபதி வழங்கிய விருந்து நிகழ்ச்சியில் கார்கேவிற்கு அழைப்பில்லை. முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு வந்தது; அவர் பங்கேற்றார். அவர், ‘இந்தியா’ கூட்டணியை சார்ந்தவர். ஆனால், இன்றைய முதல்வரும், அன்றைய எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலினை, தமிழக கவர்னர் அழைக்காமல், தமிழகத்தில் தி.மு.க., இருக்கக்கூடிய காங்கிரசை மட்டும் அழைத்திருந்தால், தமிழக காங்கிரஸ் அதில் கலந்து கொண்டிருக்குமா? என்று பதிவிட்டுள்ளது. தமிழகத்தில் தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள நிலையில், சனாதனம் விவகாரத்தால், திமுக மீது காங்கிரசின் டெல்லி மேலிட தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.