சென்னையை அடுத்த எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் மனோஜ் (24). இவர், கூலித் தொழிலாளி ஆவார். இவரின் நண்பர் கோழிசெல்வம். இவரும் அதே பகுதியில் வசித்து வந்திருக்கிறார். நண்பர்கள் இருவரும் நேற்று மாலையில் திருவொற்றியூர் எம்ஜிஆர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றுள்ளனர். இருவருக்கும் போதை தலைக்கு ஏறியதும் டாஸ்மாக் கடைக்கு முன்பாக நின்று ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர். பின்னர் இருவரும் கத்தியை வைத்துக்கொண்டு, குத்து குத்தி விளையாடலாம் வாடா.. நீ குத்துறியா… நான் குத்தட்டா… என்று விளையாடிக் கொண்டிருந்தனர்.
ஒரு கட்டத்தில் போதை தலைக்கேறியதும், கோழி செல்வத்தை நிஜமாகவே குத்த முயற்சித்து இருக்கிறார் மனோஜ். இதை பார்த்து பதறிப் போன அங்கே இருந்த திருவேங்கடம் என்ற வண்ணாரப்பேட்டை சேர்ந்த 55 வயது முதியவர் மனோஜை தடுக்க முயன்றுள்ளார். நாங்க குத்தி குத்தி விளையாடுவோம் … என் நண்பனோட விளையாடுகிறத தடுக்குறதுக்கு நீ யாருடா… என்று ஆத்திரமாக கேட்டுக்கொண்டு, திருவேங்கடத்தை கத்தியால் குத்தி இருக்கிறார் மனோஜ். இதை பார்த்ததும் பயந்து போன கோழி செல்வம், எங்கே தன்னையும் இதே போல் உண்மையாக குத்தி கொலை செய்து விடுவான் மனோஜ் என்று அச்சப்பட்டு, தான் வைத்திருந்த கத்தியால் மனோஜை குத்தி இருக்கிறார். இதில் மனோஜ், திருவேங்கடம் இருவரும் ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த புது வண்ணாரப்பேட்டை போலீசார், இருவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த இரட்டை கொலை வழக்கில் ரவுடி கோழி செல்வதை போலீசார் கைது செய்துள்ளனர். ரவுடிகள் மனோஜ், கோழி செல்வம் இருவரின் மீதும் சின்ன சின்ன வழக்குகள் நிலவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.