பழனியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். நான் கடந்த 1992 முதல் 96 வரையிலான கல்வி ஆண்டில் திண்டுக்கல் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியல் பட்ட படிப்பு முடித்தேன். இறுதியாக தேர்வு தேர்ச்சி பட்டியலில் எனது பெயர், தேர்வு எண் இல்லை. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது பல்கலைக்கழகத்திற்கு சென்று விவரம் கேட்க அறிவுறுத்தினார்கள். பின்னர் பல்கலைக்கழகத்தில் கேட்டபோது முழுமையாக அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெறாததால் தேர்ச்சிக்கான மதிப்பெண் பட்டியல் வரவில்லை என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்வெழுதி அனைத்து தேர்வுகளிலும் எழுதி தேர்ச்சி பெற்றேன்.
பின்னர் தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் பட்டியல் கேட்டு விண்ணப்பித்தேன். இதுவரை மதிப்பெண் பட்டியல் தரவில்லை. ஆகவே எனது பொறியியல் படிப்பிற்கான, அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி அடைந்த மதிப்பெண் சான்று வழங்க உத்தரவிட வேண்டும் என கடந்த 2020 ஆண்டு வழக்கு தொடர்ந்ததில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை கடந்த முறை விசாரித்த நீதிமன்றம், “மனுதாரர், தான் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் சான்றை வழங்கக் கோரி கல்லூரி நிர்வாகத்திடமும், பல்கலைக்கழகத்திடமும் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளார்.
வழக்கு தாக்கல் செய்தும் உள்ளார். எனவே மனுதாரர் கேட்கும் தேர்ச்சிக்கான மதிப்பெண் சான்றிதழை பல்கலைக்கழகம் வழங்க வேண்டும். நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு வழங்காத பட்சத்தில் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் நேரில் ஆஜராக நேரிடும்” என உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மதிப்பெண் தேர்ச்சி சான்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து நீதிபதி மதுரை காமராசர் பல்கலைக் பதிவாளருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூலம் செயல்படுத்தி, பதிவாளரை நீதிமன்றத்தில் ஜூலை 7 ஆம் தேதி ஆஜர் படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.