மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு 1.65 கோடி மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக்கணக்குக்கு ரூ.1,000 அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்த ஏராளமான பெண்கள் ஏழ்மை நிலையில் உள்ள தங்களுக்கு இந்த உரிமைத்தொகை திட்டத்தில் பலன் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களின் நிலை குறித்த குறுஞ்செய்தி, விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். அதே போல இ-சேவை மையங்களை தவிர்த்து நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள வட்டாட்சியர் அல்லது கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று மேல்முறையீடு செய்யலாம்.
மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் முகாம்களில் மேல்முறையீட்டு அதிகாரியிடம் விண்ணப்பம் செய்யலாம். மகளிர் உரிமைத் தொகைக்கான பிரத்யேக இணையதளத்திலேயே புதியவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார்.