திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். கூலி தொழில் செய்து வரும் இவருக்கு 1 மகன் மற்றும் 4 மகள்கள் உள்ளனர். இவரது 2 மகள்கள் மற்றும் மகனுக்கும் திருமணம் முடிந்து தனியாக வாழ்ந்து வருகின்றனர். மீதுமுள்ள 2 மகள்களுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த இரண்டு மகள்களும் தாய், தந்தையுடன் வசித்து வருகின்றனர். தினமும் ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி கூலி வேலைக்கு செல்வதால், ஒரு மகள் வீட்டில் தனியாக இருப்பார். மற்றொரு மகளான 27 வயது சுகன்யா, அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு ஆடுகளை மேய்க்க சென்று விடுவார்.
இந்நிலையில், வழக்கம் போல் சுகன்யா ஆடு மேய்க்க சென்றுள்ளார். அப்போது, அப்போது அதே ஊரைச் சேர்ந்த 52 வயதான மாணிக்கம் மற்றும் 70 வயதான கோவிந்தன் ஆகிய இருவரும் சுகன்யாவிடம் நைசாக பேசி, அவரை இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்நிலையில், சுகன்யாவிற்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து சுகன்யா தனக்கு நடந்ததை குறித்து அவரது பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.
இது குறித்து மகளிடம் விசாரித்த போது மாணிக்கம், கோவிந்தன் ஆகியோர் அவரை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ந்து போன ராஜேந்திரன், இது குறித்து வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் மாணிக்கம் மற்றும் கோவிந்தன் ஆகிய இருவரிடமும் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார். அப்போது அந்த கிராமத்தைச் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் இது சம்பந்தமாக ஊரில் பஞ்சாயத்து பேசி அதற்கு ஒரு நல்ல தீர்வை காண்பதாக கூறியுள்ளனர். இதையடுத்து, ஊர் பிரமுகர்களிடம் பேசி வரும்படி புகார் மனுதாரரை போலீசார் அனுப்பியுள்ளனர்.
பஞ்சாயத்தில், குற்றம்சாட்டப்பட்ட மாணிக்கம் மற்றும் கோவிந்தன் இருவரும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தல ரூபாய் 4 லட்சம் அளிக்க வேண்டும் முடிவு செய்துள்ளனர். இதனால் அவமானம் தாங்காமல், மாணிக்கம் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, ராஜேந்திரன் அளித்த புகார் மீது உடனடியாக வழக்கு பதிய வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதால், வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த சாந்தி என்பவர் மகளிர் காவல் நிலைய பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.