வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய வழக்கில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ரூபேஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்..
தமிழகத்தில் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு வதந்தி பரவியது. இதுதொடர்பாக பல்வேறு போலி வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.. மேலும் வடமாநில தொழிலாளர்கள் குறித்து பொய் செய்தி பரப்பினால், 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்திருந்தார். மேலும் தமிழகத்தில் வட மாநிலத்தவர் உள்ளிட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்தது..
இதை தொடர்ந்து, வடமாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் சொந்த ஊருக்கு செல்வதாகவும், தகவல் பரவியது.. எனினும் ஹோலி பண்டிகைக்காகவே அவர்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர் என்பது பின்னர் தெரியவந்தது.. மேலும் தமிழகத்தில் தங்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று வடமாநில தொழிலாளர்கள் தெரிவித்திருந்தனர்..
இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய வழக்கில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ரூபேஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.. புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தவறான செய்தி பரப்பியதாக அவர் மீது திருப்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்.. ரூபேஷ் குமார் தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில், அவர் இன்று தெலங்கானாவில் கைது செய்யப்பட்டார்.. அவரை காவல்துறையினர் திருப்பூர் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..