திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே வெண்ண வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவருக்கு சக்திவேல்,,கார்த்திக் என்ற 2 மகன்கள் இருந்தனர். இத்தகைய நிலையில் தான் சக்திவேலும், அவருடைய சகோதரர் கார்த்திக்கும் நேற்று முன்தினம் இரவு கடுமையான மது போதையில் வீட்டிற்கு வந்தனர். அப்போது கார்த்திக்கின் மனைவி தன்னுடைய கணவரிடம் உங்களது தாயும் அண்ணன் மனைவியும் தொடர்ந்து என்னிடம் பிரச்சனை செய்து வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கார்த்திக் வீட்டிலிருந்தவர்களிடம் தகராறு ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. ஆகவே ஆத்திரம் கொண்ட அண்ணன் சக்திவேல் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து உடன் பிறந்த சகோதரரான கார்த்திக்கின் மார்பு பகுதியில் குத்தியிருக்கிறார். இதில் கார்த்திக் அதே இடத்திலேயே நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் ஓடி வந்துள்ளனர். மேலும் அவர்கள் கார்த்திக்கை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, சக்திவேலை கொரடாச்சேரி காவல்துறையினர் கைது செய்து கார்த்திக்கின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்திருக்கிறார்கள். அதோடு கொலை செய்யப்பட்ட கார்த்திகேயன் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சொந்த அண்ணனே தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.