பஞ்சாப் மாநிலத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது..
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.. நாள் ஒன்றுக்கு சராசரியாக 15000-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி வருகிறது.. எனவே கொரொனா பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களை அறிவுறுத்தி உள்ளது.. சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு பெரிய அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும், மாஸ்க் அணிவது சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. இதை தொடர்ந்து மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வருகின்றன.. அதன்படி பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்கள் ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும் என்று டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது..
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. பஞ்சாப் மாநில அரசு, வெளியிட்டுள்ள அறிக்கையில் “ அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், உட்புற மற்றும் வெளிப்புற கூட்டங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது..
கடந்த ஒரு வாரமாக பஞ்சாபில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அம்மாநில அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.. கொரோனா வைரஸ் பரவலை சமாளிக்க தயாராக இருக்குமாறு முதல்வர் பகவந்த் மான் சுகாதாரத் துறை அதிகாரிகளை அறிவுறுத்தி இருந்தார்.. மேலும், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது..