அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை நவம்பர் 20-க்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, உடல்நிலை காரணம் காட்டி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் கடந்த 16-ம் தேதி அன்று விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர். எல். சுந்தரேசன் ஆஜராகினர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்தது.
அதை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ், பீலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜராக வேண்டிய மூத்த வழக்கறிஞர்கள் வேறொரு வழக்கு விசாரணையில் இருந்ததால், ஜாமீன் மனு மீதான விசாரணையை நவம்பர் 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். விசாரணை நடைபெற வேண்டும் என்றால் மூத்த வழக்கறிஞர்கள் நேரத்திற்கு வர வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஜாமீனில் வெளியில் வந்தால் செந்தில் பாலாஜி ஆதாரங்களை கலைப்பார். இதனால் வழக்கு பலவீனமாகும், செந்தில் பாலாஜியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் உள்ள ஆவணங்கள் படி சுமார் ரூ.67 கோடி சட்ட விரோத பண இருப்பது தெரியவந்துள்ளது என அமலாக்கத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.