இயக்குநர் விக்ரமனின் மனைவி ஜெயப்பிரியா தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் படுத்த படுக்கையாக உள்ளார். இந்நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவரை 15 சிறப்பு மருத்துவர்களுடன் விக்ரமனின் இல்லத்தில் சந்தித்து சிகிச்சை விவரம் குறித்து கேட்டறிந்தார். விக்ரமனின் மனைவி ஜெயப்பிரியா தனியார் மருத்துவமனையின் தவறான அறுவை சிகிச்சையால், கடந்த 5 ஆண்டுகளாக கால்களை கூட அசைக்க முடியாமல் இருக்கிறார்.
மேலும், இவரை கவனித்துக் கொள்ளவே விக்ரமன் படங்கள் இயக்குவதை நிறுத்தி விட்டதாகவும், தனது சொத்துக்களை விற்றுதான் மருத்துவச் செலவை பார்ப்பதாகவும் ஜெயப்பிரியா தெரிவித்திருந்தார். இந்த வீடியோ வைரலாகி, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை மீது நடவடிக்கையும், பாதிக்கப்பட்ட ஜெயப்பிரியாவுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், இயக்குனர் விக்ரமனின் மனைவியை மருத்துவக் குழுவுடன் நேரில் சென்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்துள்ளார். அப்போது ஜெயப்பிரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் மற்றும் அவர் நடப்பதற்காக மேல் சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஜெயப்பிரியாவின் சிகிச்சைக்கு அரசு உதவும் என அமைச்சர் உறுதியளித்தாகக் கூறப்படுகிறது.