மே 10ஆம் தேதி மாலை தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்வதற்கு குறித்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்.
கடந்த 2021 மே 7ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராக முக.ஸ்டாலின் பொறுப்பேற்றார். முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஆண்டு அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். அதேபோல பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ். சிவசங்கருக்கு போக்குவரத்து துறை வழங்கப்பட்டது. இதையடுத்து, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில், விரைவில் அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களை செய்ய முதலமைச்சர் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், மே 10ஆம் தேதி மாலை தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்வதற்கு குறித்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஆலோசிக்கவுள்ளதாக தெரிகிறது. அப்போது தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், மனோ தங்கராஜ், மா.சுப்பிரமணியன், நாசர், காந்தி உள்ளிட்ட அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படும் என தெரிகிறது. ஒரு அமைச்சரை விடுவித்து, அமைச்சரவையில் இடம்பெறும் டி.ஆர்.பி. ராஜாவுக்கு தொழிற்துறை அல்லது சுகாதாரத்துறை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலமைச்சரின் தனிச்செயலாளர், அரசின் முக்கியத் துறைகளை நிர்வகிக்கும் செயலாளர்கள் கூட்டத்தில் மாற்றங்கள் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.