கொரோனாவுக்கு பயந்து 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த பெண் மற்றும் அவரது 10 வயது மகன் மீட்கப்பட்டனர்.
ஹரியானா மாநிலம் குருகிராமில் சுஜன் மாஜி – முன்முன் மாஜி தம்பதியினர் 10 வயது மகனுடன் வசித்து வந்தனர். கொரோனா காலக்கட்டத்தின்போது கடைப்பிடித்த தனிமனித இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மிகத்தீவிரமாக முன்முன் மாஜி கடைபிடித்துள்ளார். கொரோனா பரவல் முடிந்து இயல்பு நிலைமை திரும்பிய பின்னும் முன்முன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இது குறித்து சுஜன் தன் மனைவியிடம் பலமுறை தெரிவித்தும் பயனில்லை. மனைவி நாளடைவில் சரியாகி விடுவார் என்று கணவரும் வேலைக்குச் செல்ல தொடங்கியிருக்கிறார். ஆனால், வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் கணவரை முன்முன் மாஜி வீட்டிற்குள் சேர்க்கவில்லை. வீட்டை பூட்டிக் கொண்டு மகனுடனேயே இருந்துள்ளார்.
பின்னர், வேறு வழியின்றி அருகிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து சுஜன் தங்கி மனைவி, மகனுக்கு செய்ய வேண்டிய உதவிகளை செய்து வந்தார். அவர்களுக்கு தேவையான காய்கறிகள் உள்ளிட்டவற்றை வாங்கி வரும் அவர், அவற்றை கதவருகே வைத்து விட்டு சென்றுவிடுவார். தினமும் தன் மனைவி, மகனுடன் ‘வீடியோ கால்’ வாயிலாக பேசி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த கணவர் சுஜன், வேறு வழியின்றி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசாரும் குழந்தைகள் நலத்துறை உறுப்பினர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனம் பிரதிநிதிகளும் வீட்டுக்கு சென்றனர். ஆனால், முன்முன் கதவை திறக்காமல் அடம் பிடித்தார். இதனால், போலீசார் வேறு வழியின்றி கதவை உடைத்து உள்ளே சென்று அவர்களை மீட்டனர். பின்னர், அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விநோத சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.