புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே மலைக்குடிபட்டி கிராமத்தில் சுப்பிரமணி – கனகு (42) தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுடன் சுப்பிரமணியின் தாயார் பழனியம்மாளும் (75) வசித்து வந்தார். விவசாய கூலி வேலைக்கு செல்லும் சுப்பிரமணி இரவில் வீட்டுக்கு வந்துள்ளார். சாப்பிட்ட பிறகு அனைவரும் தூங்கியுள்ளனர். அப்போது, தலைவலி காரணமாக பழனியம்மாள் தனது மருமகள் கனகுவிடம் டீ கேட்டுள்ளார். அப்போது கனகு தூக்கத்தில் இருந்து எழுந்து தனது மாமியாரான பழனியம்மாளுக்கு டீ போட்டு கொண்டு வந்து கொடுத்துள்ளார். அப்போது டீ மிகவும் ஆறிப்போய் இருந்ததாக கோபமடைந்து பழனியம்மாள் மருமகளை திட்டியுள்ளார்.
நள்ளிரவில் டீ போட்டு கொடுத்தும் திட்டுகிறீர்களே? என்று கேட்டதால் மாமியார் – மருமகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த கனகு அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து மாமியார் என்றும் பாராமல் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் அடைந்த பழனியம்மாள் வலியால் அலறி துடித்தார். இதையடுத்து, ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், பழனியம்மாளை மீட்டு விராலிமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பழனியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கனகுவை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.