ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிக்க பிப்ரவரி 29ம் தேதிவரை கால அவகாசத்தை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் நீட்டித்துள்ளது.
இந்தியாவில் வாகனம் ஓட்டும் அனைவரும் கட்டாயம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இந்த ஓட்டுநர் உரிமம் காலாவதி ஆகிவிட்டால் அதனை புதுப்பிக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம், எல்.எல்.ஆர், நடத்துனர் உரிமம் போன்ற ஆவணங்களை பதிவு செய்வதற்கும், உரிமத்தை நீட்டிப்பதற்கும் சாரதி என்ற இணையதளம் உள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இந்த இணையதளம் இயங்கி வருகிறது.
இந்த நிலையில், இந்த சாரதி இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. இதனால், தங்களது ஓட்டுநர் உரிமங்களை பலராலும் புதுப்பிக்க முடியவில்லை. எனவே, கற்றல் உரிமம், ஓட்டுநர் உரிமம் மற்றும் நடத்துனர் உரிமம் ஆகியவற்றை புதுப்பிக்கும் கால அவகாசத்தை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் நீட்டித்துள்ளது.
அதன்படி, ஜனவரி 31, 2024 முதல் பிப்ரவரி 15, 2024 வரை காலாவதியான கற்றல் உரிமம், ஓட்டுநர் உரிமம் மற்றும் நடத்துனர் உரிமம் ஆகியவற்றின் செல்லுபடியாகும் காலம் பிப்ரவரி 29, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எந்த அபராதமும் விதிக்கப்படாமல் பிப்ரவரி 29ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என்றும் சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் சேவைகள் பகுதியளவு முடக்கப்பட்டதால், விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்துதல், ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பித்தல், கற்றல் உரிமத்திற்கான முன்பதிவு, ஓட்டுநர் திறன் சோதனை போன்ற சேவைகளுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English summary:Driving License Renewal Deadline Extension
Readmore:இனி வீடுகளில் செல்லப் பிராணிகள் வளர்க்க லைசென்ஸ் கட்டாயம்..!! மாநகராட்சி அதிரடி அறிவிப்பு..!!