மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று மும்பை இந்தியன்ஸ் அசத்தியுள்ளது.
முதலாவது மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டி நேற்று மும்பையில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் லேனிங் 35 ரன்களும், ஷிகா பாண்டே மற்றும் ராதா யாதவ் ஆகிய இருவரும் தலா 27 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து, களமிறங்கிய மும்பை அணி கடைசி ஓவரின் 3-வது பந்தில் 134 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய நட் ஸ்கிவர்-பிரண்ட் 60 ரன் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 37 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் முதலாவது மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த டெல்லி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது மும்பை இந்தியன்ஸ்.