தர்மபுரி அருகே கடத்தூரான் கொட்டாய் அடுத்துள்ள நரசிங்கபுரம் கோம்பை வனப்பகுதியில் இளம் பெண் ஒருவர் பாறைகளுக்கு இடையில் உயிரிழந்த நிலையில், கிடந்திருக்கிறார். அந்த வழியே சென்ற மக்கள் இது தொடர்பாக அதிகமான்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் நேரில் சென்று இது குறித்து ஆய்வு நடத்தினார்.
அதோடு அதியமான் கோட்டை காவல்துறையினர் சடலத்தை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காவல்துறையினரின் தொடர் விசாரணையில் உயிரிழந்து கிடந்தவர் தர்மபுரி பழைய ரயில்வே லைன் பகுதியில் உள்ள கோல்டன் தெருவை சேர்ந்த தர்மபுரி நகராட்சி கவுன்சிலர் புவனேஸ்வரனின் மகள் ஹர்ஷா (23) என தெரியவந்துள்ளது.
பி பார்ம் முடித்துள்ள இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஒரு தனியார் பார்மசி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று காலை நரசிங்கபுரம் கோம்பை வனப்பகுதியில் கருத்து நெறிக்கப்பட்ட நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். ஆகவே அவர் நேற்று முன்தினம் பகலிலோ அல்லது மாலை நேரத்திலோ கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவருடைய கொலைக்கு காரணமானவர்கள் மற்றும் கொலைக்கான பின்னணி உள்ளிட்டவை தொடர்பாக அதியமான் கோட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு ஹர்ஷாவின் கைபேசியில் இறுதியாக பேசப்பட்ட அழைப்புகளின் அடிப்படையில், இளைஞர் ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.