உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதி கொலை வழக்கிலும், திருட்டு குற்றங்களிலும் மூளையாகச் செயல்பட்ட 12 வயது சிறுவன் மற்றும் அவனது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், ’’காசியாபாத்தைச் சேர்ந்தவர் இப்ராஹிம் (60). இவரது மனைவி ஹஸ்ரா. இந்நிலையில், இப்ராஹிம் குப்பைகளைச் சேகரித்து விற்கும் தொழில் செய்து வந்தார். இதையறிந்த 12 வயது மைனர் சிறுவன், தம்பதி இருவரிடமும் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த தம்பதியினருக்கு சொத்துகள் இருப்பதைத் தெரிந்துகொண்டு அவர்களுக்கு உதவுவதுபோல நடித்துள்ளான். பிறகு நவம்பர் 22ஆம் தேதி அந்த சிறுவன் மஞ்சேஷ், சிவம் மற்றும் சந்தீப் ஆகிய 3 நபர்களுடன் இணைந்து அவர்கள் வீட்டுக்குச் சென்றுள்ளான். அங்கு சென்று தங்கம் உள்ளிட்ட பொருட்களைக் கொள்ளையடித்துள்ளான். அப்போது இவர்களை கண்டு அதிர்ச்சியடைந்த இப்ராஹிம் மற்றும் ஹஸ்ரா அவர்களை தடுக்க முயற்சித்துள்ளனர். அப்போது, அவர்கள் இருவரையும் இவர்கள் கொலை செய்துவிட்டுத் தப்பி உள்ளனர்.
![கொலை, கொள்ளை..!! மாஸ்டர் பிளான் போட்ட 12 வயது சிறுவன்..!! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்..!! நடந்தது என்ன..?](https://1newsnation.com/wp-content/uploads/2021/01/crime-scene-murder-1.jpg)
தகவல் அறிந்து போலீஸ் வந்து பார்த்தபோது வீட்டுக்குள் இப்ராஹிம் இறந்த நிலையில் கிடந்தார். அவரின் மனைவி ஹஸ்ரா அருகில் இருந்த காலி நிலத்துக்குப் பக்கத்தில் உள்ள கழிப்பறை அருகே இறந்து கிடந்தார். கழுத்தைச் சுற்றிலும் துணியை இறுக்கிக் கொலையாளிகள் கொலை செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து காவல்துறை தனது விசாரணையை முடுக்கியது. இதில், குற்ற சம்பவத்துக்குக் காரணமாக இருந்த 12 வயது மாஸ்டர் மைண்ட் சிறுவனும் உடந்தையாக இருந்த மூவர் குறித்தும் தெரிய வந்தது. இதையடுத்தும் சிறுவன் மஞ்சேஷ், சிவம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். சந்தீப் தப்பி ஓடிவிட்டார். போலீஸார் குற்றவாளிகளிடம் இருந்து 12 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்தனர். ஒரு மொபைல் போன், தங்க செயின் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன’’. இவ்வாறு உ.பி. காவல்துறை தெரிவித்துள்ளது.