fbpx

இசை ஜாம்பவான் எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தநாள்!… திரை வாழ்க்கை ஓர் சிறப்பு பார்வை!

மெல்லிசை மன்னர், திரையுலக இசை மேதை எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரது நினைவுகளை பகிர்ந்து கொள்வோம்.

தமிழ் திரையுலகில் கடந்த 1950களில் இசை சாம்ராஜ்யம் நடத்தி கொண்டிருந்த இரட்டையர்கள் விஸ்வநாதன் -ராமமூர்த்தி. சிவாஜி கணேசன் நடித்த 2வது படமான ‘பணம்’ என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இந்த இரட்டையர்கள் 13 வருடங்களில் சுமார் 100 படங்களுக்கும் மேல் இசையமைத்தனர். பின்னர் விஸ்வநாதனிடம் இருந்து ராமமூர்த்தி பிரிந்த பின்னர் தமிழ்த்திரையுலகின் இசைத்தளபதி ஆனார் விஸ்வநாதன். எம்.எஸ்.வி அவர்களின் பலமே மின்னல் வேகத்தில் மெட்டமைக்கும் அவரது திறமைதான். எவ்வளவு கஷ்டமான காட்சிகள் கொடுத்தாலும் டியூன் மழைகளை பொழிந்து இவற்றில் ஒன்றை தேர்ந்து எடுத்து கொள்ளுங்கள் என்று இயக்குனர்களை திணறடித்துவிடுவார். எம்.ஜி.ஆர் நடித்த நேற்று இன்று நாளைபடத்துக்காக எழுதப்பட்ட 'நீ என்னென்ன சொன்னாலும் கவிதை... என்ற பாடலுக்கு அடுத்தடுத்து 10 மெட்டுக்கள் போட்டு படக்குழுவினர்களை திணறடித்தாராம்.

தென்றலின் கைபிடித்து, நந்தவனத்துக்குள் நடந்து சென்று, மலர்களை மார்போடு தழுவி, பச்சை சட்டை போட்டுக்கொண்ட இலைகளோடு இழைந்து இயற்கையின் எழிலை ரசிப்பது எவ்வளவு சுகம். அந்த சுக அனுபவத்தை தந்தது எம்.எஸ்.வியின் பல பாடல்கள். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ், ரஜினி, கமல் என எத்தனையோ கதாநாயகர்களின் படங்களுக்கு எழுதப்பட்டிருந்த வெற்றியின் முகவரியில், எம்.எஸ்.வி.யின் பெயர் பிரதான இடம் பெற்றிருந்தது.

சிவாஜி நடித்த ‘பாவமன்னிப்பு’ என்ற திரைப்படத்திற்க்காக பாடகர்கள், இசைக்கலிஞர்கள், கவிஞர் கண்ணதாசன் ஆகியோர்களை தயார் நிலையில் வைத்து கொண்டு “அத்தான் என்னத்தான் ! அவர் உன்னைத்தான் ! எப்படி சொல்வேனடி’ என்ற பாடலை வெறும் 13 நிமிடங்களில் மெட்டமைத்து ரிகார்டிங்கும் செய்து முடித்தார். இந்த உலக சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இசையுலக மேதாவியான எம்.எஸ்.வியையும் திணறடித்த ஒரு பாடலும் உண்டு. கமல்ஹாசன் நடிப்பில் கே.பாலசந்தர் இயக்கிய ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் இடம்பெற்ற ‘கடவுள் அமைத்து வைத்த மேடை, இணைக்கும் கல்யாண மாலை’ என்ற பாடலுக்கு அவர் 13 நாட்கள் எடுத்து கொண்டதாக கூறுவதுண்டு.

ஒரே ஒரு பாடலுக்கு அதிக இசைக்கருவிகளை பயன்படுத்தியும், குறைவான இசைக்கருவிகளை பயன்படுத்தியும் இசையமைத்தவர் எம்.எஸ்.வி ஒருவரே. சிவாஜி கணேசன் நடித்த ‘புதிய பறவை’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘எங்கே நிம்மதி’ என்ற பாடலுக்காக 300க்கும் மேற்பட்ட இசைக்கருவிகளை பயன்படுத்தி சாதனை படைத்த எம்.எஸ்.வி, ‘பாகப்பிரிவினை என்ற படத்தில் இடம்பெற்ற ‘தாழையாம் பூ முடித்து’ என்ற பாடலுக்கு மூன்று இசைக்கருவிகளை மட்டுமே பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையுலகில் சாதனை செய்து வந்தாலும் அவரது சிறுவயது கனவு நடிகன் ஆக வேண்டும் என்பதுதான். எனவே இசையமைப்புக்கு இடையே அவ்வப்போது தனது நடிப்பு ஆசையையும் நிறைவேற்றி கொண்டார். கமல்ஹாசன் நடித்த ‘காதலா காதலா’, அஜித் நடித்த ‘காதல் மன்னன் உள்பட பல படங்களில் அவர் நடித்துள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதன் சிறந்த இசையமைப்பாளர் மட்டுமின்றி மிகச்சிறந்த மனிதராகவும் விளங்கினார். அடுத்த வாய்ப்பை தட்டிப்பறிக்க வேண்டும் என்ற எண்ணம் அவரது கனவில் கூட இருந்ததில்லை. தேவர் பிலிம்ஸ் படத்திற்கு தொடர்ந்து இசையமைத்து கொண்டிருந்தவர் கே.வி.மகாதேவன் என்பது தெரிந்ததே. ஒருமுறை சின்னப்பாதேவர் எம்.எஸ்.வி வீட்டிற்கு வந்து தனது அடுத்த படத்திற்கு நீங்கள் தான் இசையமைக்க வேண்டும் என்று வற்புறுத்தியபோது, ‘கே.வி.மகாதேவன் இசையமைக்கும் கம்பெனிக்கு நான் இசையமைக்கிறது இல்லைனு முடிவுபண்ணியிருக்கேன். என்னால் இசையமைக்க முடியாது’ என்று மறுத்துவிட்டார்.

வீர அபிமன்யு என்ற படத்தில், ஒரு பாடலுக்கான மெட்டு, இசை மேதை சுப்பையா நாயுடுவோடு போர் புரிந்துகொண்டிருக்க, சிறுவனான எம்.எஸ்.வி. யாருக்கும் தெரியாமல், அழகான மெட்டொன்றை வாசித்துக் காட்ட, மெய்சிலிர்த்த சுப்பையா நாயுடு, அந்த மெட்டைத் தன்னுடையது என இயக்குநரிடம் கொண்டுபோய் சேர்க்க, இது அற்புதம் என்று புகழப்பட்டு, அந்தப் பாடல் வெளியானது. முதல் முதலாக மெட்டு அமைத்தாலும், எம்.எஸ்.வி. பெயர் வராததால் ஏமாற்றம். தான் பெற்ற பிள்ளையை, வேறு ஒருவர் உரிமை கொண்டாடினால், உடைந்து போகாதா மனது. பரவாயில்லை. திறமைசாலிகள் துவண்டு விடமாட்டார்கள்.

எம்.எஸ்.வி துவளவில்லை. ஒரு வழியாக பல போராட்டங்களுக்குப் பிறகு, சென்னையில் இசையமைப்பாளர் C.R. சுப்பராமனிடம் உதவியாளனாய்ச் சேர்ந்து, எம்.ஜி.ஆர். நடித்துக்கொண்டிருந்த “ஜெனோவா” படத்திற்கு, இசையமைப்பாளர் வாய்ப்பு எம்.எஸ்.விக்குக் கிடைத்தது. நீண்ட நெடிய போராட்ட வரலாற்றில், முதன்முதலாய் எம்.எஸ்.விக்கு ஒரு வசந்தம் அறிமுகமானது. இதில் சிறப்பாகப் பாடல்கள் அமைத்திருந்தார் எம்.எஸ்.வி. எம்.எஸ்.வியின் இசை அமைக்கும் வேகம், தயாரிப்பாளர்களை அவர் பக்கம் திருப்பியது. இயக்குநர்கள் விரும்பும் மெட்டுகளை, எம்.எஸ்.வி.யின் ஹார்மோனியப் பெட்டி அடைகாத்து வைத்திருந்தது. அவர்களின் விருப்பங்களை எல்லாம் அது நிறைவேற்றிக் கொடுத்தது.

சந்தம் பெரிதா? பாடல் பெரிதா? எல்லாம் சந்தங்களுக்கும் பாடல் எழுத முடியுமா? மெல்லிசை மன்னருக்கும், திரையுலகல் கம்பன் கண்ணதாசனுக்கும் ஒரு போட்டி. ஆனால் இந்தப், போட்டியில் உண்மையான வெற்றி ரசிகர்களுக்குத்தான். அந்தப் பாடல்தான் ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில் வரும் ‘சிப்பி இருக்குது முத்தும் இருக்குது’ என்ற பாடல். எஸ்.விஸ்வநாதனும் கவிஞர் கண்ணதாசனும் இணைந்து காலத்தால் அழியாத பல பாடல்களை கொடுத்துள்ளனர். இருவருமே பிள்ளையுள்ளங்கொண்ட வெகுளிகள் என்பது மட்டுமின்றி இருவரின் பிறந்த தினமும் ஒன்று என்பது ஒரு அபூர்வ ஒற்றுமை ஆகும்.

Kokila

Next Post

அசத்தல்...! பாலியல்‌ குற்றங்களிலிருந்து பெண்‌ குழந்தைகளை காக்க இமைகள்‌ காக்கும்‌ திட்டம்...! டிஜிபி அதிரடி அறிவிப்பு...!

Sat Jun 24 , 2023
தமிழ்நாடு காவல்துறை வடக்கு மண்டலம்‌ சார்பாக பாலியல்‌ குற்றங்களிலிருந்து பெண்‌ குழந்தைகளை காக்கும்‌ இமைகள்‌ திட்டம்‌ அறிமுகம்‌ செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்‌ மூலம்‌ பாலியல்‌ குற்றங்களில்‌ இருந்து பெண்‌ குழந்தைகளைபாதுகாக்கும்‌ வகையில்‌ காவல்துறை மற்ற அரசு துறைகளுடன்‌ இணைந்து செயல்படநிலையான இயக்கமுறை ( Standard operation procedure) உருவாக்கப்பட்டுள்ளது. இதன்‌ பெண்‌ மூலம்‌ குழந்தைகளுக்கு எதிரான பாலியல்‌ குற்றங்களைமுறையாக வழக்கு பதிவு செய்வது, முனைப்புடன்‌ புலன்‌ விசாரணை செய்வது, 60 நாட்களில்‌ […]

You May Like