திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளிப்பட்டி அம்பேத்கர் காலணியில் வசித்து வருபவர் அய்யனார். இவரது மனைவி வள்ளியம்மாள் (55). இவரது மகள் ராசாத்தி (32), ராசாத்தியின் கணவர் லட்சுமணன் (35). இவர்கள் அனைவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர். லட்சுமணன் கள்ளிப்பட்டி அருகிலுள்ள தனியார் இரும்புத் தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு வள்ளியம்மாள், மகள் ராசாத்தி, மருமகன் லட்சுமணன் ஆகியோர் வீட்டில் அமர்ந்திருந்த போது, அங்கு வந்த மர்ம நபர்கள், பயங்கர ஆயுதங்களை வைத்து தாயையும் மகளையும் கொடூரமாக வெட்டினர்.
இதனை தடுக்க வந்த மருமகன் லட்சுமணனையும் வெட்டிவிட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். வெட்டுப்பட்ட தாய்-மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். மருமகன் லட்சுமணனுக்கும் வயிற்றில் கத்தி குத்து விழுந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த லட்சுமணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த தாடிக்கொம்பு போலீசார் வள்ளியம்மாள் மற்றும் ராசாத்தி இருவரின் உடலையும் கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் வந்து விசாரணையை துரிதப்படுத்தினர். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து எதற்காக தாயையும் மகளையும் கொலை செய்தார்கள்? கொலை செய்தவர்கள் யார்? இவர்களுக்கும் கொலை செய்தவர்களுக்கும் முன் பகை ஏதும் உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம கும்பல் குடியிருப்பு பகுதியில் புகுந்து தாயையும் மகளையும் கொடூரமான முறையில் கொலை செய்து மருமகனுக்கும் கத்தி கொடுத்து விழுந்தத சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.