தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி. திட்டங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சிப் பட்டதாரி பொறியாளர் தேர்வில் முன்னுரிமை வழங்குவதை உறுதி செய்திடக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பிற மாநிலங்களைச் சேர்ந்த 299 பொறியாளர்கள்
நியமிக்கப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் பிற மாநிலங்களைச் சேர்ந்த 299 பேர் பொறியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதில், ஒன்றில் கூட தமிழரை நியமிக்காத என்.எல்.சி.யின் செயல் கடும் கண்டனத்திற்குரியது என தமிழக அரசியல் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மேலும், பிற மாநிலத்தவர் நியமிக்கப்பட்டது தமிழர்களிடையே கடும் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ”தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசின் நவரத்னா பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. திட்டங்கள் மற்றும் சுரங்கங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் சிறப்புத் தேர்வின் மூலம் நியமிக்கப்பட வேண்டும் எனவும், கேட் (GATE) தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பயிற்சிப் பட்டதாரி பொறியாளர்களை நியமிக்கக்கூடாது எனவும் உத்தரவிட வேண்டும் என்று 2022ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி தான் ஏற்கனவே எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொண்டேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சிப் பட்டதாரி பொறியாளர் பணிக்குத் தேர்வு செய்வதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் அழுத்தமான நியாயம் இருப்பதால், இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டு விரைவில் சாதகமானதாக முடிவு எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.