கடலூர் மாவட்டம் உச்சிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் என்பவரது மகன் ஜெயக்குமார் (28). இவர் கடலூர் மாவட்ட நீதித்துறையில் தொழில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவருக்கும் சிதம்பரத்தை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண்ணுக்கும் நேற்று காலை சிதம்பரம் கமலீஸ்வரன் கோயில் தெருவில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக நேற்று முன்தினம் மாலை மணமக்களின் உற்றார், உறவினர்கள் மண்டபத்துக்கு வருகை தந்திருந்தனர். மாலை 7 மணிக்கு அருகில் உள்ள விநாயகர் கோயிலில் இருந்து வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணமக்கள் ஊர்வலமாக வாகனத்தில் வந்தனர். இது இரவு 9 மணி வரை நடைபெற்றது. பின்னர் இரவு 12 மணிவரை இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர்.
அதன் பின் மணமக்கள் தங்கள் அறைகளுக்கு சென்றுவிட்டனர். நள்ளிரவு வரை இருவரும் போனில் பேசியுள்ளனர். காலையில் தாலி கட்டும் நேரத்தில் யாரிடமும் சொல்லாமல் மாப்பிள்ளை மாயமாகிவிட்டார். அதனைத் தொடர்ந்து மாப்பிள்ளையை பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. மணமகள் மற்றும் மணமகளின் பெற்றோர் அவர்களின் உறவினர்கள் உட்பட பலரும் அதிர்ச்சி அடைந்தனர். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த உற்றார் உறவினர்களும் கவலை அடைந்தனர். பின்னர் மணமகள் மற்றும் அவரின் பெற்றோர் உறவினர்கள் சிதம்பரம் அருகேயுள்ள வேளங்கிபட்டு கிராமத்தில் உள்ள மணமகள் வீட்டார் உறவினர் மகன் இளவரசனை மாற்று மாப்பிள்ளையாக தேர்வு செய்து குறிப்பிட்ட நேரத்தில் திருமணம் செய்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து பெண் வீட்டார் சிதம்பரம் காவல்நிலையத்தில் புகார் அளித்து காவல்துறையினர் முன்னிலையில் திருமணத்திற்கு ஏற்பட்ட செலவுகளைப் பெற்றுக்கொண்டனர்.