சென்னை, போதை விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம் தொடர்பான போஸ்டரை துவக்கி வைத்த பிறகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ஒவ்வொரு வருடமும் பள்ளிகள் துவங்கும் போது விழிப்புணர்வு நிகழ்ச்சியோடு தொடங்கும். தொலைக்காட்சிகளும் புதுமையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அதில் நாங்களும் கலந்து கொள்வோம். கற்றல் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்கிறோம். போதைக்கு அடிமையானவர்கள், உடன் இருப்பவர்கள் சொல்வதை கேட்டு விளையாட்டாக தான் இந்த பழக்கத்கை ஆரம்பிக்கிறார்கள்.
அதன் பின்னர் போதைக்கு அடிமையாவது தான் அவமானம். அதை திருத்திக் கொள்ள மருத்துவரிடம் செல்வது அவமானம் இல்லை. “போதை இல்லா பாதை இயக்கம்” சார்பில் போதை இல்லா தமிழகத்தை உருவாக்க அக்டோபர் 2-ஆம் தேதி நாடு தழுவிய போதை விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம் சென்னையில் தொடங்க இருக்கிறது. மேலும் தென்காசி மாவட்டம் பாஞ்சாங்குளம் பள்ளியில் நடந்த தீண்டாமை விவகாரம் பற்றி முதன்மை கல்வி அலுவலரிடம் விளக்கம் கேட்டுள்ளோம். சம்பவம் நடந்த நாளில் 12 மாணவர்கள் பள்ளிக்கு ஏன் வரவில்லை என விளக்கம் கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.