நெல்லையருகே வீட்டிற்குள் புகுந்து ரத்தத்தை காட்டி நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. நெல்லை மாவட்டம் வடக்கன் குளத்தைச் சேர்ந்தவர் டேனியல் சேகர். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சகிலா அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கணவர் வெளிநாட்டுக்கு சென்று விட்டதால் தனது மகளுடன் தனியாக வீட்டில் வசித்து வந்திருக்கிறார் ஷகிலா. நேற்றிரவு இருவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே வந்தனர். அவர்கள் இருவரும் ரத்தம் வைத்த அரிவாளை காட்டி அவர்களிடமிருந்து தங்க செயின் தங்க வளையல் மற்றும் வீட்டிலிருந்து தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக ஷகிலா பணகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . இந்த புகார் தொடர்பாக காவல்துறையினரும் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
இது பற்றி காவல்துறையின் முதல் விசாரணையில் சகிலாவின் கணவர் கடந்த 20 ஆம் தேதி வெளிநாட்டிற்கு சென்றதை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியுள்ளதாக தெரிவித்தனர். வீட்டை சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த போதும் அவற்றின் திசையை மாற்றி வைத்து முகமூடி அணிந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். வீட்டின் வாசலில் கோழியின் தலையை அறுத்து அதன் ரத்தத்தை அரிவாளில் தடவி அவர்கள் இருவரையும் பயமுறுத்து உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் மக்களை பயமுறுத்துவதற்காக கோழியை அறுத்து அதன் ரத்தம் மற்றும் தலையை வீட்டு வாசலில் விட்டுச் சென்று இருக்கலாம் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.