தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம் செய்யும் பொறுப்பினை, மாநில அரசு தன்னுடைய வசமே வைத்திருக்கிறது. இதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் என்ற அமைப்பை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. இந்த அமைப்பின் கீழ் 2 விதமான துணை அமைப்புகள் உள்ளன. அதாவது, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் (TANTRANSCO), மற்றொன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO).
இந்நிலையில், புதிய மின் இணைப்பு தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, மின் இணைப்பு பெற வேண்டுமானால், மின் வாரிய இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அதை பிரிவு அலுவலகத்தினர் பரிசீலித்து இணைப்பு வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மற்றொரு கோரிக்கை எழுந்துள்ளது. வழக்கமாக, புதிதாக மின் இணைப்பு வழங்கப்பட வேண்டுமானால் 30 நாட்களும், கரண்ட் கம்பம் நிறுவுவதற்கு 60 நாட்களும், டிரான்ஸ்பார்மர் நிறுவ 90 நாட்களும் கால அவகாசம் உள்ளது. ஆனால், குறித்த காலத்தில் இணைப்பு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், புதிய மின் இணைப்பு கேட்டு மாநிலம் முழுவதும் உள்ள அலுவலகங்களில் 2 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த மாதம் பருவமழை துவங்குவதால் அதற்குள் புதிய இணைப்புகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
புதிய இணைப்புகளை பெற ஆவணங்கள் : சொத்து வரி ரசீது, விற்பனை ஒப்பந்தம் போன்ற அந்த சொத்து விண்ணப்பதாரருடையது தான் என்பதற்கான சான்று ஆதாரத்தின் நகல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் வீட்டின் உரிமையாளராக இல்லை என்றால், வீட்டின் உரிமையாளரிடமிருந்து படிவம் 5 போன்று பெறப்பட்ட கடிதம் அல்லது விண்ணப்பதாரர் அந்த வீட்டில்தான் வசிக்கிறார் என்பதற்கான சான்றான படிவம் 6 சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பதாருக்கு 112KW அதிகமாக மின் அளவு தேவை என்றால், அவர்கள் அதற்குரிய படிவங்களை ஸ்கேன் செய்து அதன் பிடிஎஃப்-ஐ சமர்ப்பிக்க வேண்டும். TANGEDCO இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.