பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக அவ்வப்போது புகார் எழுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஆயுதபூஜை விஜயதசமி என தொடர் விடுமுறையை அடுத்து ஆம்னி பேருந்துகளில் வழக்கம்போல் அதிக கட்டணம் வசூலிப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து விதிமீறலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிறைபிடித்தனர். இதனையடுத்து ஆம்னி பேருந்துகள் இன்று மாலை 6மணி முதல் இயக்கப்படாது என்று தென் மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்திருந்தது, பின்னர் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில், பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு முடிவு கட்டும் வகையில் எதிர்வரும் தீபாவளி பண்டிகை காலத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணம் எவ்வளவு என்பதை நிர்ணயம் செய்து, அரசு ஒப்புதலுடன் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். அந்த விலை பட்டியல் தான் தற்போது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி ஆம்னி பேருந்துகள் கட்டணம் விவரம்:
- சென்னை – திருச்சிக்கு : ரூ.1,610 முதல் ரூ.2,430 வரை.
- சென்னை – மதுரைக்கு : ரூ.1,930 முதல் ரூ.3,070 வரை.
- சென்னை – கோவைக்கு : ரூ.2,050 முதல் ரூ.3,310 வரை.
- சென்னை – தூத்துக்குடிக்கு : ரூ.2,320 முதல் ரூ.3,810 வரை.
- சென்னை – நாகர்கோவிலுக்கு : ரூ.2,610 முதல் ரூ.4,340 வரை.
- சென்னை – நெல்லைக்கு : ரூ. 2,380.முதல் ரூ. 3,920 வரை.
- சென்னை – சேலம், தஞ்சை : ரூ.1,650 முதல் ரூ.2,500 வரை.
ஆம்னி பேருந்துகள் விலை கட்டணத்திற்கு அரசே ஒப்புதல் தந்துள்ள நிலையில் இதற்கும் குறைவாகவே கட்டணம் வசூலிப்பதால் கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதாக எழும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கட்டணம் எதிர்வரும் தீபாவளி பண்டிகை வரை இறுதியானது என்பதால் பொதுமக்கள் யாரும் இதற்கு மேல் அதிக கட்டணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.