மேற்கு நேபாளத்தில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 89 பெண்கள் உட்பட 157 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 190 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று இரவு 11.47 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. காத்மாண்டுவில் இருந்து 550 கிமீ தொலைவில் உள்ள ஜாஜர்கோட் மாவட்டத்தில் உள்ள ராமிதாண்டாவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த போது, டெல்லி மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
நேபாளில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஜாஜர்கோட் மற்றும் ருகும் மேற்கு ஆகிய இரண்டு மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஜாஜர்கோட்டில் குறைந்தது 105 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 105பேர் காயமடைந்துள்ளனர். ருகும் மேற்கு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 52 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 85 பேர் காயமடைந்துள்ளனர்.
எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக மீட்புப்பணியில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மலைப்பாங்கான பகுதிக்கு செல்லும் சாலைகள் பல இடங்களில் மண்சரிவால் துண்டிக்கப்பட்டதால் மீட்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது. “நிலச்சரிவுகள் காரணமாக சாலைகள் தடைபட்டதால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடைய தேடல் குழு அதிக நேரம் எடுத்தது” என்று ஜாஜர்கோட்டின் உதவி தலைமை மாவட்ட அதிகாரி ஹரிச்சந்திர ஷர்மா கூறியுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு நேபாளை 7.8 மற்றும் 7.3 என்ற இரண்டு நில நடுக்கங்கள் தாக்கியது இதில் சுமார் 8,000 பேர் உயிரிழந்தனர். நேபாளத்தில் 2015க்கு பிறகு ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும்.
இந்தியாவும் சீனாவும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் உதவ முன்வந்துள்ளதாக துணைப் பிரதமர் நாராயண் காஜி ஷ்ரேஸ்தா தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது “நாங்கள் இப்போது பூர்வாங்க தேடல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று அவர்களிடம் கூறியுள்ளோம். பின்னர் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் நாங்கள் உங்களிடம் கோருவோம், ”என்று கூறினார்.