நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாமக தலைமையில் புதிய கூட்டணி அமையும் என அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் 34-வது ஆண்டு விழா மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸின் 84-வது பிறந்தநாள் விழா ஆகியவை திண்டுக்கல் மாவட்ட பாமக சார்பில் இருபெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பாமக மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேல் ராவணன், ”பழனி கோயிலுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை முறையாக
கோயில் நிர்வாகம் சார்பில் ஏலம் விடுவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இத்தனை ஆண்டுகளாக விவசாய நிலங்களை சரியாக குத்தகை செலுத்தி வந்த ஏழை விவசாயிகளுக்கு இந்த ஏலத்தில் முன்னுரிமை வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த நபர் லுங்கி அணிந்திருந்ததால் உள்ளே விட அனுமதி மறுக்கப்பட்டதாக வந்த செய்தி வருத்தமளிப்பதாக கூறிய அவர், கோயிலுக்கு செல்வதில் ஆடைக்கட்டுப்பாடு இருப்பது தவறல்ல என்றும் தீர்வு வேண்டி காவல் நிலையத்திற்கு வரும் நபர்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு என்பது தவறானது என்றும் வடிவேல் ராவணன் கூறினார். மேலும், 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்றும், தங்கள் கட்சியின் தலைமையை ஏற்கும் கட்சிகளை கொண்டு தேர்தலை சந்திப்போம் என்றும் பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் தெரிவித்தார்.