சென்னை, ரேஷன் அரிசி கடத்தலுக்கு முடிவு கட்ட பொது விநியோக திட்டத்திற்கு வழங்கப்படும் அரிசி மூட்டைகளில் க்யூ ஆர் குறியீட்டினை பயன்படுத்த தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மற்றும் குறைந்த விலை அரிசி, சட்டவிரோதமாக பக்கத்து மாநிலங்களுக்கு கடத்தப்படுவது அதிகரித்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதை தொடர்ந்து ரேஷன் அரசி கடத்தல்களை தடுக்கும் வகையில் தமிழக உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கும் துறையின் கிடங்குகளில் இருந்து விநியோகத்திற்கு எடுத்து செல்லப்படும் அரசி மூட்டைகளுக்கு க்யூ ஆர் குறியீடு பாதுகாப்பு முறை அறிமுகப்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. மேலும் கிடங்குகளில் இருப்பு வைக்கப்படும் ஒவ்வொரு அரிசி மூட்டையிலும் க்யூ ஆர் குறியீடு பதியப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த நவீன முறை, அரிசி கடத்துபவர்கள் மீது வழக்கு தொடரவும் அரசுக்கு உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.
மேலும் ரேஷன் கடைகளுக்கு மட்டுமே அரிசி சென்று வருவதை உறுதிப்படுத்த ஆலைகளில் இருந்தே அரசி மூட்டைகளின் விநியோகத்தை கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசி மூட்டைகளில் க்யூ ஆர் குறியீட்டை ஓட்டுவது மட்டுமல்லாமல் ரேஷன் பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களின் இருப்பிடத்தை கண்காணிக்கும் கருவிகளை வாகனங்களில் பொருத்தவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.