ரேஷன் அட்டையை ஆன்லைன் மூலமாக பெறும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பதிலளித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் தரமான அரிசியை வழங்குவதை உறுதி செய்திருக்கிறோம் என்று தெரிவித்தார். மேலும், இடைத்தரகர்கள் இல்லாமல் குடும்ப அட்டையை ஆன்லைன் மூலமாக பெறும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டு குடும்ப அட்டைகள் வீடு தேடி வரும் என்று தெரிவித்தார். நேரடி கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு ஆட்சியர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
குடும்ப அட்டைகள் காணாமல் போனாலோ அல்லது அதில் திருத்தம் ஏற்படுத்த வேண்டும் என்றாலோ அது தொடர்பாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து புதிய அட்டையை பெறும் முறை 2020இல் இருந்து நடைமுறையில் உள்ளது. புதிய அட்டை பெற இணையத்தில் மூலம் விண்ணப்பித்து அதற்கான தொகையை ஆன்லைனில் செலுத்தினாலும், வாடிக்கையாளர்கள் அதை பெறுவதற்கு வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியதாக இருந்தது. இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு இதை எளிமைப்படுத்தும் வகையில், இணையம் மூலம் விண்ணப்பிக்கும் புதிய அட்டைகளை வீட்டிற்கே தபால் மூலமாக பெற்றுக்கொள்ளும் வசதி தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.