சேலம் மாவட்டம், எடப்பாடி அருகேயுள்ள சாணாரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் ( 48). இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரம்யா. இவர் உடல்நலக்குறைவால் கடந்த 1 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் (12). இந்த நிலையில், தன்னையும், மகனையும் கவனித்து கொள்ள 2வதாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக பல்வேறு இடங்களில் பெண் தேடி வந்துள்ளார். இதன் பின்னர் நண்பர்களின் யோசனைப்படி ஜோடி ஆப் என்ற செயலியில் முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் தனது புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், அதே ஜோடி ஆப்பில் லதா எனற பெண் கணவரை இழந்து வாழ்வதாகவும், தனது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் என்றும் பதிவு செய்து இருந்தார். அதில் இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட செந்தில் அந்த பெண்ணிடம் பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த பெண், தன்னுடைய கணவர் வீட்டாருக்கு பணம் கொடுக்க வேண்டியிருப்பதாக கூறியுள்ளார்.
இதனை நம்பிய செந்தில் பல கட்டமாக அவரது வங்கி கணக்கில் பணம் அனுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி சேலத்துக்கு வந்த அந்த பெண், தன்னை உடனே திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். பின்னர்கோவிலில் வைத்து அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட செந்தில், தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் தனது வீட்டில் இருந்த நகைளை அவருக்கு அணிவித்ததுடன், பீரோ சாவியையும் கொடுத்துள்ளார். மேலும் ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள செல்ஃபோன் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளார்.
முதலிரவுக்கு ஏற்பாடான நிலையில், பகல் முழுவதும் சிரித்து சிரித்து பேசிய அவர், இரவு நேரம் வந்தவுடன் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு சென்று வந்தவுடன் இரவு சோர்வாக இருப்பதாக கூறி படுத்துள்ளார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது அந்த பெண்ணை காணவில்லை. மேலும் செந்திலின் வீட்டில் இருந்த நகை, பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை சுருட்டிக்கொண்டு அவர் ஓட்டம் பிடித்துள்ளார்.