தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே விவசாய தோட்டத்தில் சட்ட விரோதமாக கஞ்சா செடியை பயிரிட்டு வளர்த்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பக்கத்தில் இருக்கும் மகேந்திரமங்கலம் அருகே உள்ள வீரன்கொட்டாய் கிராமத்தில் சட்ட விரோதமாக கஞ்சா செடி பயிரிட்டுள்ளதாக, மகேந்திரமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்படி, காவல்துறையினர் வீரன்கொட்டாய் கிராமத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த மாதையன்(48) என்பவர் அவருடைய விவசாய நிலத்தில் தீவனப்புற்களுக்கு இடையே ஊடு பயிராக கஞ்சா செடியை வளர்த்து வந்தது தெரிந்தது.
இதை தொடர்ந்து, காவல்துறையினர் தோட்டத்தில் இருந்த கஞ்சா செடிகளை தீயிட்டு அழித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கஞ்சா செடியை பயிரிட்டு வளர்த்த மாதையன் மீது மகேந்திரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மாதையனை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.