கேரள மாநிலம் கொச்சி அருகே ஆலங்காடு பகுதியில் வாழ்ந்து வருபவர் விமல் (54). இவரது மகன் ரோகித் (22). சம்பவத்தன்று இரவு 7 மணி அளவில் ரோகித் தனது வீட்டின் அருகே நின்று நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இரண்டு வாலிபர்கள் குடிபோதையில் பைக்கில் அந்த வழியாக வந்தனர்.
அவர்கள் இருவரும் ரோகித் வீட்டின் அருகில் வந்த போது தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தனர். இதை பார்த்த ரோகித் அவர்களை காப்பாற்றுவதற்காக சென்றார்.
குடிபோதையில் இருந்த அவர்கள் ரோகித்தை தாக்கினர். இதை பார்த்த தந்தை விமல் ஓடிவந்து மகனை காப்பாற்ற முயன்றார். அப்போது போதையில் இருந்த இரண்டு வாலிபர்களும் தந்தை விமலை பயங்கரமாக தாக்கினர்.
இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த விமலை அந்த பகுதியில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவமனையில் விமல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கொச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தப்பியோடி வாலிபர்களை தேடி வருகின்றனர்.