சென்னை திருவொற்றியூர் சிவசக்தி நகரில் வசித்து வருபவர் செந்தில்குமார் (39). கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வடிவுக்கரசி(37). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் செந்தில் குமார், குடித்து விட்டு வந்து மனைவியை சந்தேகப்பட்டு சண்டை போட்டுள்ளார். இதனால் கடந்த மாதம் அவரது மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் செந்தில் குமார் மாமனார் வீட்டிற்கு சென்று பலமுறை மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர் மனைவி வர மறுத்ததால், பிரிந்து சென்ற தனது மனைவியை சேர்த்து வைக்குமாறு எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அவர்கள் இந்த புகாரை கருத்தில் கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த, செந்தில் குமார் இன்று காலை திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் 200 அடி பி.எஸ்.என்.எல். செல்போன் டவரில் ஏறி நின்று கொண்டு செல்போன் மூலம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் காதர் மீரான் தலைமையில், காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் செந்தில்குமாரிடம் செல்போன் மூலம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது செந்தில்குமாரிடம் அவரது மனைவியோடு பேச்சுவார்த்தை நடத்தி சேர்த்து வைப்பதாக காவல்துறையினர் வாக்குறுதி அளித்தனர். ஆனால் மனைவியை அழைத்து வந்தால் தான் கீழே இறங்குவேன் என்று கூறி கீழே இறங்க மறுத்து விட்டார். இதனையடுத்து மீஞ்சூர் அருகே இருக்கும் நந்தியம்பாக்கத்தில் தாய் வீட்டில் இருந்த செந்தில்குமார் மனைவியை காவல்துறையினர் அழைத்து வந்தனர். மனைவியை பார்த்தவுடன் செந்தில்குமார் கீழே இறங்கி வந்தார். பின்னர் அவருக்கு மனநல ஆலோசனை வழங்க எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.