அரியானா மாநிலத்தில், மாபியா கும்பல் ஒன்று பட்டப்பகலில், ஒரு மூத்த காவல்துறை அதிகாரி மீது லாரியை ஏற்றி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானாவில் ஆரவல்லி மலைத்தொடருக்கு அருகில் உள்ள பச்கான் என்னும் இடத்தில் சட்டத்திற்கு புறம்பாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக, உயர் காவல்துறை அதிகாரி சுரேந்திர சிங் பிஷ்னோய்க்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், இன்று காலை 11 மணியளவில் அவர் காவல்துறையினருடன் குழுவாக சம்பவ இடத்திற்கு சென்றார். காவல்துறையினரை, பார்ததும் சட்டவிரோதமாக சுரங்கத்தில் கற்களை வெட்டி எடுத்துக் கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். அப்போது அந்த அதிகாரி நடுவழியில் நின்றுகொண்டு, கல் ஏற்றி சென்ற வாகனங்களை நிறுத்துமாறு சைகை செய்தார். அப்போது லாரியை ஓட்டி வந்த டிரைவர் அவர் மீது லாரியை ஏற்றினார். இதில் அந்த அதிகாரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மேலும் சில காவல்துறையினர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்தை நிகழ்த்திவிட்டு தப்பியோடியவர்களை காவல்துறையினர், தேடி வருகின்றனர். மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார். மேலும் காவல்துறை அதிகாரியின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார். 2021-22 ஆம் ஆண்டிற்கான அரியானா பொருளாதார ஆய்வறிக்கையின் படி, 2014-15 முதல் செப்டம்பர் 2021 வரையிலான காலகட்டத்தில், முறையான அனுமதி ஆவணங்கள் இல்லாமல் கனிம வளங்களைக் வெட்டி செல்வது உட்பட மொத்தம் 21,450 சட்டவிரோத சுரங்க வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி, ஆரவல்லி பகுதியில் பல இடங்களில் சட்டவிரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.