பழனி பேருந்து நிலையத்தில் உடுமலை டவுன் பஸ்கள் நிற்கும் நடைமேடை பகுதியில் நேற்று இரவு ஏழு மணி அளவில் ஏராளமானோர் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டனர். அப்போது திடீரென ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் மற்றொருவரை கால், தோள்பட்டையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதைக்கண்டதும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து பழனி டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பழனி டவுன் காவல்துறையினர் பேருந்து நிலையத்துக்கு வந்து காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
காவல்துறையினர் அவரிடம் விசாரித்தபோது, அவர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த கோவிந்தன் (32) என்பதும், மது போதையில் தகராறு ஏற்பட்டு இந்த சம்பவம் நடந்ததாக தெரியவந்தது. வெட்டியவர் யார், என்பது பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். பழனி பேருந்து நிலையத்தில் வாலிபரை கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.