தமிழகத்தில் நம்மாழ்வார் வழியை பின்பற்றி பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் மீட்டெடுப்புகளை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. அவரது மறைவுக்குப் பிறகு தற்பொழுது சிவரஞ்சனி, சரவணகுமார் தம்பதியர் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு சென்று பாரம்பரிய 1525 வகையான நெல் ரகங்களை மீட்டுள்ளனர்.
அவற்றை அவர்களுக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் விளை நிலத்தில் பாத்திகள் அமைத்து அவற்றை அடையாளப்படுத்தி ஒவ்வொரு பாத்தியிலும் ஒவ்வொரு வகையான நெல்மணிகளை விதைத்து அதனை அறுவடை செய்து பாதுகாத்து வருகின்றனர். 1125 வகையான நெல்மணிகளை ஆவணப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வகை நெல் கதிர்களை அறுவடை செய்து அடையாளமிட்டு, அடிப்படையில் ரகங்களுக்கான பெயரை உறுதிப்படுத்தி தனித்தனியே பதப்படுத்தி வைத்துள்ளனர்.
பதப்படுத்தப்பட்ட நெல்மணிகளை தனித்தனி கண்ணாடி குடுவைகளில் அடைத்து அதனை காட்சிப்படுத்தி வைத்துள்ளனர். இந்த பணியை லாப நோக்கமின்றி சேவை மனப்பாண்மையில் செய்துள்ளனர். இவர்களது இந்த செயலுக்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழ்நாடு மாநில அரசு, இளைஞர் விருது 2022 அறிவித்துள்ளது. இந்த விருதினை நாளை சுதந்திர தின விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார். விருது பெற்ற சிவரஞ்சனியை ஏரளமான விவசாயிகள், பொதுமக்கள், சேவை சங்கங்கள், அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.