இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு தெலுங்கானாவில் ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியை சேர்ந்த முக்கிய பிரமுகரான தமினேனி கிருஷ்ணய்யா கம்மம் மாவட்டத்தில், கம்மம் ஊரக மண்டல பகுதியில் தெலடாரூபள்ளி கிராமத்தில் தேசிய கொடி ஏற்றினார். அதன்பிறகு தனது இருசக்கர வாகனத்தில் அவர் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
அப்போது கிராமத்தின் நுழைவு பகுதிக்கு வந்து கொண்டிருந்த அவரை நான்கு பேர் ஆட்டோவில் வந்து வழிமறித்து, தாக்கினர். இதில், சம்பவ பகுதியிலேயே அவர் உயிரிழந்தார். அதன்பிறகு நான்கு பேரும் தப்பி ஓடி விட்டனர். அவர்களை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர், என காவல் உதவி ஆணையாளர் கூறியுள்ளார். இந்த கொலை சம்பவத்திற்கு பின்பு ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் சிலர், கும்பலாக சென்று சி.பி.எம். தலைவர் தமினேனி கோட்டேஷ்வர் ராவ் வீடு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவரது வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், அவரது வீட்டின் சில பகுதிகள் சேதமடைந்தன.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் வந்து கூட்டத்தினரை கலைத்தனர். சான்றுகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படும் என காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த படுகொலை சம்பவம் எதிரொலியாக தெலடாரூபள்ளி கிராமத்தில் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட கிருஷ்ணய்யா சி.பி.எம். கட்சியில் இருந்து சில காலங்களுக்கு முன் விலகினார். பின்னர், ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியில் சேர்ந்தார். இந்நிலையில், தேசிய கொடியேற்றி விட்டு திரும்பிய சில நிமிடங்களில் அவரை அடையாளம் தெரியாத நபர்கள் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.