கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. திருப்பத்தூர் மாவட்ட எல்லை பகுதியில் வந்து கொண்டிருந்த கார், நாட்டறம்பள்ளி அடுத்த லட்சுமிபுரம் அருகே திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இது பற்றி தகவல் அறிந்ததும் நாட்றம்பள்ளி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த பெங்களூருரை சேர்ந்த மேலேபாய்(25), சரண்சிங்(25) ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த காரை சோதனை செய்ததில், அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்கள் அடங்கிய 15 மூட்டைகள் இருந்தன.
இதை தொடர்ந்து நாட்டறம்பள்ளி காவல்துறையினர் காரில் இருந்த போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் போதைப் பொருட்களை கடத்தியதற்காக மேற்கண்ட இரண்டு பேர் மீது நாட்டறம்பள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.