fbpx

காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த திமுக பிரமுகர்; காரை எரித்து நாசமாக்கிய பெண்ணின் அண்ணன்..!

தேனி மாவட்டம் சின்னமனூர் தேரடி தெருவை வசித்து வருபவர் பாண்டி. இவரது மகள் மல்லிகா (24). இவரது மாமனார் ஊரான கூழையனூரை சேர்ந்த ஈஸ்வரனின் மகன் தினேஷ்குமார் (28). மல்லிகாவும், தினேஷ்குமாரும் கடந்த எட்டு வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் காதல் ஜோடி தங்களது வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதற்காக அவர்கள், தங்களது உறவினரான தி.மு.க. பிரமுகர் சந்திரசேகரிடம் உதவி கேட்டனர். எனவே, இன்று காதல் ஜோடிக்கு, திருமணம் செய்து வைப்பதற்காக அவர்களை சந்திரசேகர் தனது காரில் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றார். அங்கு மல்லிகாவுக்கும், தினேஷ்குமாருக்கும் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்தவுடன் பாதுகாப்பு கேட்டு சின்னமனூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதை தொடர்ந்து இருதரப்பு பெற்றோரையும் அழைத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே மணமக்கள் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பம்போல் வாழலாம் என்று காவல்துறையினர் கூறினர். இந்நிலையில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போது, மல்லிகாவின் அண்ணன் பெருமாள் (26), காவல் நிலையத்திற்கு வெளியே வந்து காவல் நிலையம் முன்பு நின்றிருந்த சந்திரசேகரின் காரை இரும்பு கம்பியால் அடித்து நொறுக்கிவிட்டு, கொண்டு வந்திருந்த மண்எண்ணெய்யை எடுத்து காரின் மீது ஊற்றி, தீவைத்துவிட்டு பெருமாள் தப்பி ஓடிவிட்டார்.

அப்போது கார் தீப்பற்றி எரிந்தது. இதனை பார்த்த காவல்துறையினர், சின்னமனூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து எரிந்து கொண்டிருந்த காரில் தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து சந்திரசேகர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பெருமாளை கைது செய்தனர். காதல் ஜோடிக்கு உதவிய தி.மு.க. பிரமுகரின் காரை பெண்ணின் அண்ணன் தீவைத்து எரித்த சம்பவம் சின்னமனூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Baskar

Next Post

கோகுல்ராஜ் கொலை வழக்கு..! 5 பேரின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு..! விசாரணைக்கு ஏற்பு..!

Tue Aug 30 , 2022
கோகுல்ராஜ் கொலை வழக்கில் தாயார் மற்றும் சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் 5 பேரை விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. கோகுல்ராஜ் தாயார் சித்ரா உயர்நீதிமன்ற கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சங்கர், அருள் செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சுரேஷ் ஆகிய 5 பேரையும் விடுதலை […]

You May Like