உறையூர் டாஸ்மாக் பாரில் ரியல் எஸ்டேட் அதிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். குடித்துவிட்டு போதையில் நண்பர்கள் இந்த வெறிச்செயலை செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் அருகே காட்டூர் பாலாஜி நகர் 2-வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் குமார். இவரது மகன் சரண்ராஜ் (35). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் இன்று உறையூரில் இருக்கும் அவரது உறவினர் வீட்டு வந்தார்.
அப்போது அங்குள்ள அவரது பழைய நண்பர்களை சந்தித்தார். இதை தொடர்ந்து சரண்ராஜ் மற்றும் அவரது நான்கு நண்பர்களுடன் மாலை சுமார் ஐந்து மணி அளவில் உறையூர் சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் இருக்கும் பாரில் அமர்ந்து குடித்துள்ளனர். அப்போது மது போதையில் நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அதன் பிறகு அவர்களுக்குள் அடித்துக்கொண்டனர். இதனை பார்த்த பாரில் வேலை செய்பவர்கள் அவர்களை தடுக்க முயற்சி செய்தனர். இதில் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரண்ராஜின் கழுத்தில் குத்தினர்.
இதில் படுகாயத்துடன் தடுமாறி கடையில் இருந்து வெளியே வந்த சரண்ராஜ் சாலையில் விழுந்து துடிதுடித்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்த நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த சம்பவம் பற்றி உறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த உறையூர் காவல்துறையினர் மற்றும் துணை கமிஷனர் சுரேஷ்குமார், காந்தி மார்க்கெட் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
பிறகு சரண்ராஜின் உடலை பிரேத பரிசோதனைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து உறையூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து தப்பியோடிய நான்கு பேரை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் உறையூர் பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.