குமாரபாளையத்தில் காவிரி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வந்த, அண்ணா திராவிட முன்னேற்ற கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சூழ்ந்து கொண்டு, பெண்கள் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு குறித்து கேள்வி எழுப்பினர்.
மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீரால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர பகுதிகளில் குடியிருக்கும், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேர்ந்த கலைமகள் வீதி மற்றும் மணிமேகலை வீதி, இந்திரா நகர், குறுங்காடு, கலைவாணி நகர், போன்ற பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 340 குடும்பங்கள் வெள்ள நீர் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு, அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் இன்று உணவு மற்றும் பருப்பு அரிசி போன்ற நிவாரண பொருட்களை வழங்க, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அந்த பகுதிக்கு வந்திருந்தார். அங்குள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு. நிகழ்ச்சி முடிந்ததும் ஈரோடு மாவட்டம் பவானி போவதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.
அந்த நிலையில் அவரது காரை வழிமறித்து சூழ்ந்து கொண்ட பெண்கள். சமையல் எரிவாயு விலை அதிகரித்துள்ளது குறித்தும், மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை மிகவும் உயர்ந்துள்ளதாகவும், இதனை குறைக்க மத்திய அரசிடம் கூறி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை எழுப்பினர். அதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.